மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
35. அச்சப்பத்து
தில்லையில் அருளியது
ஆனந்த முறுதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
    பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
    கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
    உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
1
வெருவரேன் வேட்கைவந்தால்
    வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
    எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
    தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
2
வன்புலால் வேலும் அஞ்சேன்
    வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
    அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
    இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
3
கிளியனார் கிளவி அஞ்சேன்
    அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
    வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
    தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
4
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
    பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்தன்
    தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
    சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
5
வாளுலாம் எரியும் அஞ்சேன்
    வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலா நீற்றன் ஏற்றன்
    சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
    திடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
6
தகைவிலாப் பழியும் அஞ்சேன்
    சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
    பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
    முன்னவன் பாத மேததி
அகம்நெகா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
7
தறிசெறி களிறும் அஞ்சேன்
    தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
    விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
    சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
8
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
    மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
    நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
    திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
9
கோணிலா வாளி அஞ்சேன்
    கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
    நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
    வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com